செய்திகள்

திருப்பூரில் கோழிக்கடை உரிமையாளர் குத்திக் கொலை

Published On 2018-05-17 10:35 GMT   |   Update On 2018-05-17 10:35 GMT
திருப்பூரில் கோழிக்கடை உரிமையாளர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் ராக்கியா பாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணி என்கிற பெரியசாமி (27). பல்லடத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராக்கியாபாளையம் குறிஞ்சி நகர் பகுதியில் மணி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது மணியின் கழுத்தில் பாட்டிலால் குத்தியதற்கான காயம் இருந்தது. அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் மது பாட்டில்கள் கிடந்தது.

எனவே மணி நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News