தேனியில் அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
தேனி:
தேனி அன்னஞ்சி விலக்கு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின் சாந்தகுமார் (வயது50). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர்கள் இருவரும் நாகர்கோவிலில் நடந்த ஒரு ஜெபகூட்ட நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். அப்போது இவர்கள் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இவர்கள் வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ லாக்கரும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரொக்க பணம், ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 800 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 800 ஆகும். இது குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் ஜஸ்டின் சாந்தகுமார் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.