செய்திகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-05-08 17:14 GMT   |   Update On 2018-05-08 17:14 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,100 கனஅடியாக அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு கடந்த 4-ந்தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள அதிகாரிகள் அளந்து கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,100 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் கொட்டியது.

இதனால் கோடை விடுமுறைக்கு ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றங்கரையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பார்வை கோபுரம், நடைபாதை, தொங்குபாலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் உணவகம், மீன் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.  
Tags:    

Similar News