சிவகாசியில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை
சிவகாசி:
சிவகாசியில் உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பால் (வயது34), ஆட்டோ டிரைவர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தர் (23), பிரதீப் (20). சுந்தர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதற்கு ஜான்பால் தான் காரணம் என நினைத்த சுந்தர் அவரிடம் கேட்டார். இதைத்தொடர்ந்து அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஜான் பால் போலீஸ் நிலையம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது சுந்தரும், அவரது நண்பர் பிரதீப்பும் அங்கு வந்தனர். ஜான்பாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். திடீரென்று சுந்தர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜான்பாலை சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜான்பாலை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜான்பால் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர், பிரதீப்பை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.