செய்திகள்

திருமணம் செய்ய வலியுறுத்தி இளம்பெண்ணை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மாணவன் கைது

Published On 2018-04-30 10:43 GMT   |   Update On 2018-04-30 10:43 GMT
வேலூர் மாவட்டம் காட்டியில் திருமணம் செய்ய வலியுறுத்தி இளம்பெண்ணை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மாணவனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

காட்பாடியை சேர்ந்த 22 வயது இளம்பெண். பி.காம். பட்டதாரியான இவர், ஆற்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடன் கல்லூரியில் படித்த காட்பாடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ‌ஷபீர் (23). தற்போது எம்.பி.ஏ. படித்து வருகிறார். இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ‌ஷபீரின் காதலை இளம்பெண் ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ‌ஷபீர் அடிக்கடி இளம்பெண்ணை வழிமடக்கி காதல் செய்யும்படியும், மதம்மாறி திருமணம் செய்யவும் வலியுறுத்தி வந்துள்ளார். இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் கடந்த மாதம் 8-ந் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இளம்பெண் நேற்று இரவு 7 மணியளவில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ‌ஷபீர் திடீரென இளம்பெண்ணை வழிமடக்கி திருமணம் செய்யும்படி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ‌ஷபீர், மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.

இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். ‌ஷபீர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

பொதுமக்கள் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து ‌ஷபீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News