செய்திகள்

நளினி சிதம்பரத்துக்கு எதிரான சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- ஐகோர்ட்டு

Published On 2018-04-24 06:46 GMT   |   Update On 2018-04-24 07:05 GMT
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக நளினி சிதம்பரத்துக்கு எதிரான சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #SaradhaChitFundScam
சென்னை:

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி சிக்கியது.

இந்த நிறுவனத்திடம் இருந்து வக்கீல் கட்டணமாக பெருந்தொகையை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வக்கீலுமான நளினி சிதம்பரம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரிக்கும் மத்திய அமலாக்கத்துறை, விசாரணைக்கு நேரில் ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி நளினி சிதம்பரம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேல்நடவடிக்கை எடுக்கக்கூடாது என சம்மனுக்கு தடை விதித்து ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.


இந்தத் தடையை நீக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில், அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்கிறேன். நளினி சிதம்பரத்துக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஏற்கனவே பிறப்பித்த தடையையும் நீக்குகிறேன். நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் புதிய சம்மனை அமலாக்கத்துறை அனுப்ப வேண்டும். அந்த சம்மனில் கூறப்பட்டுள்ள தேதியில் அதிகாரிகள் முன்பு நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
Tags:    

Similar News