செய்திகள்

கோவை அருகே மரக்கடையில் பயங்கர தீ விபத்து

Published On 2018-04-23 17:47 GMT   |   Update On 2018-04-23 17:47 GMT
கோவை அருகே மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

கவுண்டம்பாளையம்:

கோவை சங்கனூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் மைக்கேல் திரவியம். இவர் கண்ணப்பன் நகரில் மரக்கடை வைத்துள்ளார். மேலும் மரங்களை வாங்கி வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவிற்கு வெட்டியும் கொடுத்து வந்தார்.

இதனால் ஏராளமான மரங்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு மரக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை ஆகும். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்ற கால் டாக்சி டிரைவர் பார்த்து மரக்கடை உரிமையாளர் மைக்கேல் திரவியத்திற்கு தகவல் கொடுத்தார்.

அவர் உடனடியாக கடைக்கு விரைந்து வந்தார். தீ விபத்து குறித்து கவுண்டம் பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஓரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் மரக்கடையில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து சேதம் அடைந்து விட்டதாக அதன் உரிமையாளர் மைக்கேல் திரவியம் தெரிவித்தார்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News