திருவாடானை அருகே டிராக்டர் மீது மினி லாரி மோதல்- 2 பேர் பரிதாப பலி
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது45).
இவர் திருவெற்றியூரிலிருந்து தேவகோட்டைக்கு டிராக்டரில் சாமியானா பந்தல் போடும் தளவாடச் சாமான்களை ஏற்றிக்கொண்டு திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கோவணி அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மினி லாரி டிராக்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் சம்பவ இடத்திலே பலியானார்.
மினி லாரியில் வந்த காரைக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மோகன்குமார் (34) என்பவரும், அவருடன் காரைக்குடி மித்ராவயல் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இருவரையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு இளையராஜா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மோகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீஸ்காரர் கணேசன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.