செய்திகள்

கம்பம் அருகே கிராமங்களில் உலா வரும் போலி டாக்டர்கள்

Published On 2018-04-18 11:54 GMT   |   Update On 2018-04-18 11:54 GMT
கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கம்பம்:

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டி, நாராயணதேவன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் நோய்களுக்கு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனை மற்றும் கூடலூர், காமயகவுண்டன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.

இந்த கிராமப்பகுதிகளில் முறையாக எம்பிபிஎஸ் மற்றும் சிறப்பு படிப்பு படித்த டாக்டர்களின் மருத்துவமனைகள் அதிகம் இல்லாததால், கிராமப் பகுதிகளில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகர்ப் புறங்களில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் இடங்களிலோ, போதுமான மருத்துவ வசதி இல்லாத கிராமப்புறங்களிலோதான் போலி டாக்டர்கள் கிளினிக்கை தொடங்குகின்றனர். இவர்களிடம் கிராமத்தினரே அதிகமாக சிகிச்சைபெற்று வருகின்றனர்.

டாக்டரிடம் உதவியாளராக, நர்சாக இருந்த அனுபவமோ, மெடிக்கல் வைத்திருந்த அனுபவமோ உள்ளவர்களே பெருமளவில் போலி டாக்டராக உள்ளனர். தலைவலி, காய்ச்சல், வயிற்றுக்கோளாறு போன்ற இவர்களிடம் செல்கின்ற கிராம மக்களுக்கு படித்த டாக்டர்கள் போலவே இவர்கள் ஊசி போட்டு, மாத்திரை மருந்து கொடுக்கின்றனர்.

இவர்களின் தவறான சிகிச்சையால் பலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் ஆய்வு நடத்தி போலி டாக்டர்களை களையெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News