ராணுவ வாகனம் மோதி கேரள கல்லூரி மாணவர் பலி
ஊட்டி:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இன்று காலை 5 மோட்டார் சைக்கிள்களில் கல்லூரி மாணவர்கள் 10 பேர் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரதீஷ் (வயது 20), என்பவரும் அவரது நண்பர் ராகுலும் வந்தனர். மோட்டார் சைக்கிளை பிரதீஷ் ஓட்டினார்.
ஊட்டி பைக்காரா என்ற இடத்தில் வந்தபோது எதிரே ராணுவ டிரக் வாகனம் வந்தது. எதிர்பாராதவிதமாக ராணுவ வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரதீஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். படுகாயத்துடன் ராகுல் உயிருக்கு போராடினர்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடன் சென்ற மற்ற மாணவர்கள் ஆஸ்பத்திரியில் கதறி அழுதவாறு சோகத்துடன் இருந்தனர்.
விபத்து குறித்து ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.