நிலக்கோட்டையில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் கோடாங்கி நாயக்கன்பட்டி காலனி பகுதியில் போதிய குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு வருடங்களாக தண்ணீர் தேடி பக்கத்து ஊர்களுக்கு அலைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு காலிகுடங்களுடன் பெண்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
மேலும் குடி தண்ணீர் முறையாக கிடைக்கவில்லை, தனி ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
அதன் பிறகு அலுவலகத்திற்குள் சென்று அதிகாரிகளிடம் குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்கள் பகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும், தண்ணீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு செய்யாவிட்டால் நிலக்கோட்டை நால்ரோட்டில் மறியல் செய்வோம் என கூறினார்கள்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு இருந்து கலைந்து சென்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.