செய்திகள்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்த மோடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார்

Published On 2018-04-12 10:02 GMT   |   Update On 2018-04-12 10:02 GMT
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். #NarendraModi
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏற்கனவே போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட மற்றும் அடையார் கேன்சர் மருத்துவமனையில் புதிய கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.

மோடி வருகைக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன. அதன்படி, இன்று காலை முதலே விமான நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் கருப்பு கொடியுடன் திரண்டனர்.

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தரையிறங்கிய மோடி ஹெலிகாப்டர் மூலம், ராணுவ தளவாட கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு அடையாறு கேன்சர் மருத்துமனைக்கு அவர் வந்தார். இதற்கிடையே, கருப்பு நிற பலூன்களை பல இயக்கத்தினர் பறக்க விட்டனர்.

அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் வந்த மோடி, டெல்லிக்கு புறப்பட்டார். எதிர்ப்பு என்பது களத்தில் மட்டும் இல்லை. இணையதளத்திலும் இருந்தது. #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் முதலிடத்தை பிடித்தது. #NarendraModi #TamilNews
Tags:    

Similar News