மதுரையில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை திருட்டு
மதுரை:
மதுரை மேலப்பொன்ன கரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பரமன். இவரது மனைவி லட்சுமி (வயது 83). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியாண்டி கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
5-வது குறுக்குத் தெரு அருகே வந்துகொண்டிருந்த போது அவரை வழிமறித்த 2 நபர்கள், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அப்போது நகரில் நகைப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே நகைையை அணிந்து செலல வேண்டாம் என லட்சுமியிடம் கூறியுள்ளனர்.
தொடர்ந்து 2 பேரும் லட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை வாங்கி பேப்பரில் பொட்டலமாக மடித்து கொடுப்பதாக கூறி நகையை திருடினர். இதை அறியாத லட்சுமி வீட்டில் வந்து அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் நகைக்கு பதிலாக கற்கள் இருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி நகையை அபேஸ் செய்த நபர்களை தேடி வருகிறார்கள்.