செய்திகள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 275 பேருக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் வழங்கினார்

Published On 2018-04-07 01:34 GMT   |   Update On 2018-04-07 01:34 GMT
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 275 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை:

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வாரியப் பணியாளர்கள் அதிக அளவில் ஓய்வு பெற்றதால், வாரியத் திட்டங்கள் மற்றும் அன்றாடப் பணிகளைத் தடையின்றி செயல்படுத்தும் நோக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசால் நேரடி நியமனமுறை மூலம் காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று 2016-2017-ம் ஆண்டிற்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, 1:2 என்ற விகிதாசார அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, 25 உதவி பொறியாளர், 19 நில அளவையர், 19 இளநிலை வரைவு அலுவலர், 12 தட்டச்சர், 125 இளநிலை உதவியாளர், 75 தொழில்நுட்ப உதவியாளர் என மொத்தம் 275 பணியிடங்களுக்கு பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 275 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 பேர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News