செய்திகள்

தென்காசி பகுதியில் திடீர் மழை- அடவிநயினார் அணையில் 40 மில்லி மீட்டர் மழை பதிவு

Published On 2018-04-02 10:43 GMT   |   Update On 2018-04-02 10:43 GMT
தென்காசி, குற்றாலம், உள்ளிட்ட பகுதியில் நேற்று திடீரென மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணை பகுதியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது.

குற்றால அருவிகளில் வெயில் காரணமாக தண்ணீர் வராமல் இருந்தது. ஐந்தருவியில் மட்டும் 2 கிளைகளில் லேசாக தண்ணீர் வந்தபடி இருந்தது. ஆனால் தற்போது ஐந்தருவியில் உள்ள 2 கிளைகளிலும் கூடுதலாக குளிப்பதற்கு இதமாக தண்ணீர் வருகிறது.

அதிகபட்சமாக செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணை பகுதியில் 40 மில்லி மீட்டரும், தென்காசியில் 31 மில்லி மீட்டரும், செங்கோட்டை நகர் பகுதிகளில் 27 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. குண்டாறு பகுதியில்-21, சிவகிரியில்-20, ஆய்க்குடியில்-19, ராமநதி அணை பகுதியில்-8, கருப்பாநதி-2, சங்கரன் கோவில்-2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வழக்கத்தை விட சற்று கூடுதலாக வினாடிக்கு 110.99 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணையில் இன்று காலை நீர்மட்டம் 23.65 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணையில் இன்று காலை 82.26 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் இதுபோல அவ்வப்போது கோடை மழை பெய்தால் மட்டுமே இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை வராது என்றும் மழை பெய்யவில்லை என்றால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News