செய்திகள்

ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது

Published On 2018-03-31 02:23 GMT   |   Update On 2018-03-31 04:39 GMT
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்து வருகின்றனர். மேலும் மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும் நடந்து வருகிறது

எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 184 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அங்குள்ள கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என தமிழக மீனவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி ராமேசுவரத்தில் நடந்த மீனவர்கள் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (31-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என அறிவித்தனர்.

அதன்படி இன்று ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன்காரணமாக 1000 படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களின் வாழ்வாதாரமாக இருந்த விசைப் படகுகளை இலங்கை கடற்படை பிடித்து கொண்டு விடுவிக்க மறுத்து வருகிறது. இதனால் நாங்கள் கடலுக்கு செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவிக்கிறோம்.

எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காண முன்வர வேண்டும். அதுவரை எங்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றனர். #Tamilnews
Tags:    

Similar News