செய்திகள்
திருப்பத்தூரில் ஆடிட்டர் மனைவியிடம் நகை பறிப்பு
திருப்பத்தூரில் ஆடிட்டர் மனைவியிடம் 8½ பவுன் செயினை பைக்கில் வந்த மர்ம வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் ராமக்காபேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). ஆடிட்டர். இவரது மனைவி தனலட்சுமி (45). திருப்பத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே ரவிச்சந்திரனின் அலுவலகம் உள்ளது.
சம்பவத்தன்று இரவு தனலட்சுமி கணவர் அலுவலகத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பினார். கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது பைக்கை நிறுத்தி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம வாலிபர்கள், தனலட்சுமியின் கழுத்தில் இருந்த 8½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் கீழே விழுந்ததில் தனலட்சுமி லேசான காயமடைந்தார்.
இதுகுறித்து, திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.