செய்திகள்

வார்டு மறுவரையறை பணிகளால் உள்ளாட்சி தேர்தல் தாமதம் - தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தகவல்

Published On 2018-03-27 01:37 GMT   |   Update On 2018-03-27 01:37 GMT
வார்டு மறுவரையறை பணிகள் நடந்து வருவதால் தான் உள்ளாட்சி தேர்தல் தாமதமாகிறது என தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

உள்ளாட்சி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு விருப்பம் இல்லை என்பது தெரிய வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு நடத்தி போர்க்கால அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் வார்டுகள் உள்ளன. அவற்றை மறுவரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து 19 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த பணிகளால் தான் தேர்தல் நடத்துவதற்கு தாமதம் ஏற்படுகிறது” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News