புதுவையில் வீட்டில் இருந்த இளம்பெண் கடத்தல்
புதுச்சேரி:
புதுவை கோவிந்தசாலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வேலு (வயது45). இவர் புதுவை அண்ணாசாலையில் தள்ளுவண்டியில் வைத்து பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் கங்கா (வயது17) இவர் பிளஸ்-2 படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த கங்காவை திடீரென காணவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் கங்கா இல்லை. இதையடுத்து வேலு பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரில் வீட்டில் இருந்த தனது மகள் கங்காவை யாரோ கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன், ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து கங்காவை கடத்தி சென்றவர்களை தேடிவருகிறார்கள்.
வில்லியனூர்- பொறையூர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (வயது32). சம்பவத்தன்று கலைவாணி கோவிந்தசாலையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. கோவிந்தசாலையில் உள்ள தாய் வீட்டில் முருகன் விசாரித்த போது அங்கு கலைவாணி வரவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து முருகன் தனது மனைவி மாயமானது குறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.