செய்திகள்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2018-03-25 05:20 GMT   |   Update On 2018-03-25 05:20 GMT
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ராமேசுவரம்:

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச்செல்லும் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

இந்த பிரச்சினைக்குஉரிய தீர்வு காணவேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு பல முறை இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளது. இருப்பினும் தாக்குதல் மட்டும் நின்றபாடில்லை.

இந்த நிலையில் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல்கள் அங்கு வந்தன. தமிழக மீனவர்களை இங்கிருந்து உடனடியாக சென்று விடுங்கள். இல்லை என்றால் நடப்பதே வேறு என்று எச்சரித்தனர்.

பயந்துபோன மீனவர்கள் கரைக்கு திரும்புவதற்கான பணிகளை மேற்கொண்ட போது படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் தூக்கி வீசினர். மீன்களையும் அள்ளிக் கொண்டனர். உயிர் பிழைத்தால்போதும் என நினைத்த ராமேசுவரம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த வி‌ஷயத்தில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தங்கள் உள்ளக் குமுறலை தெரிவித்தனர். #tamilnews

Tags:    

Similar News