செய்திகள்

ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைமை கணக்காயர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

Published On 2018-03-24 07:59 GMT   |   Update On 2018-03-24 07:59 GMT
தமிழ்நாடு மாநில தலைமை கணக்காயர் அருண்கோயல் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

தமிழ்நாடு மாநில தலைமை கணக்காயர் அருண்கோயல் அலுவலகத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது பணி நியமனத்துக்காக ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த லஞ்ச பணத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

அவரது அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கஜேந்திரன், சிவலிங்கம், ராஜா ஆகியோரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அதிகாரி அருண்கோயல் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மூலம் பணி நியமனம் பெற்றவர்கள் யார்-யார் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் இருந்து வரும் அரசுக்கான வருவாய்கள் இவரது அலுவலகத்தின் மூலம்தான் அரசு வங்கிகளில் காசோலையாக போடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்படும். இந்த பணத்துக்கு வட்டி கிடையாது.

இதனால் அருண்கோயல் தனியாக வங்கி கணக்கு தொடங்கி இந்த பணத்தை அதில் பணப்பரிமாற்றம் செய்து இருப்பதும் தெரிய வந்தது. இதனால் அது தொடர்பாகவும் அருண் கோயலிடம் போலீசார் விசாரித்தனர்.

மேலும் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே உள்ள இவரது வீட்டில் நேற்று இரவு முதல் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் வைத்துள்ள வங்கி கணக்குகள் விவரங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

பணம்-நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவருடன் பிடிபட்ட மற்ற ஊழியர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பிறகு விரிவான விவரங்கள் வெளியிடப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News