வாணரப்பேட்டையில் தாய் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை ஜெயராம் செட்டியார்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். புதுவை ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் சதீஷ் (வயது31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மகேஸ்வரி திடீரென இறந்து போனார். அதுமுதல் வீட்டுவேலை மற்றும் உணவு சமைப்பது போன்ற பணிகளை சதீஷ் செய்து வந்தார். மேலும் தாய் திடீரென இறந்ததால் சதீஷ் விரக்தியில் இருந்து வந்தார்.
இதனால் சதீஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை செல்வராஜ் ரெயில் நிலையத்துக்கு பணிக்கு சென்ற நிலையில் சதீஷ் வீட்டில் மின்விசிறியில் கயிறால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து செல்வராஜ் வீடு திரும்பிய போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.