கிருமாம்பாக்கம் அருகே ஆட்டோ டிரைவருக்கு சோடாபாட்டில் குத்து- மீனவர் கைது
பாகூர்:
கிருமாம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருக்கும் நரம்பை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஸ்டாலின் (36) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை சத்யராஜ் சாராயம் குடிப்பதற்காக நரம்பையில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே சாராயம் குடித்துக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கும், சத்யராஜிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த ஸ்டாலின் சாராயக்கடையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து சத்யராஜை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்த சத்யராஜ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர். #tamilnews