செய்திகள்

சென்னையில் போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது

Published On 2018-03-02 09:21 GMT   |   Update On 2018-03-02 09:21 GMT
சென்னையில் போலீஸ் சீருடையில் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:

சென்னையில் ஜாம் பஜார் பகுதியில் போலீஸ் சீருடையில் வாலிபர் ஒருவர் வலம் வருவதாகவும், மெரினா கடற்கரையிலும், அப்பகுதியில் உள்ள கடைகளிலும் அவர் மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத் தது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறிக் கொண்டு ஜாம் பஜார் பகுதியில் மேயர் சிட்டிபாபு தெருவில் அந்த நபர் தங்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது பெயர் அசோக் (28). கோவை என்.ஜி.ஓ. காலனி மேட்டுப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர். கடந்த ஜனவரி 15-ந் தேதியில் இருந்து இவர் லாட்ஜில் தங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மெரினா கடற்கரையில் இவர் போலீஸ் சீருடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கடற்கரைக்கு வரும் இளைஞர்கள்-இளம் பெண்களை மிரட்டி பண வசூலில் ஈடுபட்டுள்ளார். பெசன்ட்நகர் கடற்கரையிலும் கைவரிசை காட்டி இருக்கிறார். தான் தங்கியிருந்த லாட்ஜ் அருகில் உள்ள டிபன் கடையில் சென்று சாப்பிட்டு விட்டு தோரணையுடன் பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.

சூளைமேட்டில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்துக்கு சென்று ரூ.6 ஆயிரம் முன்பணமாக கொடுத்து மோட்டார் சைக்கிளை வாங்கி உள்ளார்.

அதில் போலீஸ் என்றும் எழுதி வைத்துள்ளார். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அசோக் கடந்த 1½ ஆண்டாக பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. அசோக் தங்கி இருந்த லாட்ஜில் 2 போலீஸ்காரர்கள் தங்கி இருந்தனர். அவர்களுக்கு அசோக் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்தே அந்த போலீஸ்காரர்கள் அளித்த தகவலின் பேரிலேயே நேற்று இரவு போலி அதிகாரி அசோக் சிக்கியது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News