தஞ்சை-கும்பகோணத்தில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்:
நீட்தேர்வில் தமிழக மருத்துவ மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவை சார்பில் தஞ்சை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மண்டல திராவிடர் கழக செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் வரவேற்றார். தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வன், திராவிடர் கழக மாணவர் அணி தலைவர் தனபால், தலைமை கழக பேச்சாளர் புலிகேசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் இரு சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே போல் நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு மாணவர் அமைப்பு செயலாளர் சிவகுமார் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருவிடைமருதூர் எம்.எல்.ஏ.கோவி.செழியன், தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், நகர செயலாளர் தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews