செய்திகள்
சூலூர் அருகே கார் மோதி கேண்டீன் பெண் ஊழியர் பலி
சூலூர் அருகே கார் மோதி கேண்டீன் பெண் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் எம்.சடையப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் லிங்கசாமி. விவசாயி. இவரது மனைவி கேப்பம்மாள் (வயது 50). இவர்களது மகள் கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது கோவை வந்த கேப்பம்மாள் சூலூரில் உள்ள மில் கேண்டீனில் வேலைக்கு சேர்ந்தார்.
சங்கோதிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கேப்பம்மாள் வேலைக்கு புறப்பட்டார். ஊத்துப்பாளையம் பிரிவு ரோட்டை கடந்தபோது கோவையில் இருந்து வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேப்பம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.