எண்ணூரில் நர்சு தீக்குளித்து தற்கொலை
திருவொற்றியூர்:
எண்ணூர் சுனாமி குடியிருப்பு 32-வது பிளாக் கில் வசித்து வருபவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவரது மகள் சந்தியா (வயது 19). திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
இவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அஜித் என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பாக எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது இருதரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக அவர்கள் கூறி சென்றனர்.
இந்த நிலையில் சந்தியா திருவண்ணாமலையில் உள்ள அஜித்தின் சொந்த வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த அவர் சோகமாக காணப்பட்டார்.
நேற்று இரவு திடீரென சந்தியா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சந்தியாவின் சாவுக்கான காரணம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.