செய்திகள்

கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்

Published On 2018-01-22 04:46 GMT   |   Update On 2018-01-22 04:46 GMT
போளூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போளூர்:

போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.

திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு கால்களையும் வாரி கீழே தள்ளினார். தடுமாறி தரையில் சாய்ந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முகத்தில் குத்தினார்.

வாலிபரின் கையில் இருந்த மோதிரம் அவரது உதட்டை கிழித்தது. இதனை கண்டு திடுக்கிட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் வாலிபரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரை தாக்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

காயமடைந்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை உடனடியாக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். அங்கிருந்த எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து போலீசில் புகார் செய்தனர். எம்.எல்.ஏ.வை தாக்கிய வாலிபரை போளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் வாலிபர் போளூரை சேர்ந்த நடராஜன் மகன் வசந்தமணி (வயது 39)என்பது தெரியவந்தது.

இவர் மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கட்சி பணிகளுக்கு வசந்தமணி மேடை அலங்காரம் செய்துள்ளார்.

இதற்கு பணம் கொடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தமணி நேற்று இரவு எம்.எல்.ஏ. வீட்டுக்கு பணம் கேட்க சென்றார். அங்கு எம்.எல்.ஏ. இல்லாததால் ஆத்திரமடைந்து அங்கிருந்த கார் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தார்.

இதனையடுத்து திருமண நிகழ்ச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ.வை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News