செய்திகள்

தண்ணீர் வீணாவதை தடுக்க முயன்ற பிளஸ்-2 மாணவர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2018-01-20 11:50 GMT   |   Update On 2018-01-20 11:50 GMT
தண்ணீர் வீணாவதை தடுக்க முயன்ற பிளஸ்-2 மாணவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

கும்பகோணம் அருகே உள்ள சத்திரம்கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். பிளம்பர். இவருடைய மகன் தமிழழகன்(வயது17). இவர் கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கும்பகோணம் செங்காங்கண்ணி பகுதியில் டியூசன் படித்து வந்தார்.

நேற்று மாலை டியூசன் முடிந்ததும் நண்பர்களுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, செக்காங்கண்ணி பகுதியில் உள்ள பொது கழிவறையில் தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

இதை பார்த்த தமிழழகன், தண்ணீர் வீணாவதை தடுக்க கழிவறை வளாகத்தில் உள்ள மின் மோட்டாரை அணைக்க சென்றார். அப்போது வீணாகி கொண்டிருந்த தண்ணீரை மிதித்த தமிழழகனை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தமிழழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தமிழழகனின் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையில் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் திரண்டு கதறி அழுதனர். கழிவறையில் உள்ள மோட்டாரில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News