செய்திகள்

பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ். இன்று டெல்லி பயணம்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு நேரில் அழைப்பு

Published On 2018-01-17 07:19 GMT   |   Update On 2018-01-17 07:19 GMT
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்கிறார். டெல்லி சென்றதும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும்படி மோடிக்கு நேரில் அழைப்பு விடுக்க உள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா தமிழக சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடியை பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.

இன்று எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு இன்று பிற்பகலில் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.



அவர் இன்று மாலை அல்லது நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக சட்டசபையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரில் அழைப்பு விடுக்கிறார்.

அவர் கலந்து கொள்வதற்கு வசதியாக எந்த தேதியில்? எந்த நேரத்தில்? விழா நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோருதல், ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறி கூடுதல் நிதி ஒதுக்க கோருதல் ஆகியவை பற்றி பிரதமருடன் பேசி முடிவு செய்கிறார்.

அதன் பிறகு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் ஆகியோரையும் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று தெரிகிறது.
Tags:    

Similar News