செய்திகள்
லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
கந்தம்பாளையம் அருகே, லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, லாரி டிரைவர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். கந்தம்பாளையம் அருகே உள்ள இரும்பு பாலம் என்ற இடத்தில் நள்ளிரவில் லாரியை வழிமறித்த கும்பல், கத்தியை காட்டி மிரட்டி பழனிசாமியின் செல்போன் மற்றும் ரூ.9,700-ஐ பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதுகுறித்து பழனிசாமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அருண் என்கிற அருணாசலம் (வயது 20), அருண்பாண்டியன் (20), மணிகண்டன் என்ற மணி (20), ஆர்.மணிகண்டன் (20), விக்னேஷ் (20), சக்திவேல் (21), எ.மணிகண்டன் (21) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் அருண் என்கிற அருணாசலம், அருண்பாண்டியன், மணிகண்டன் என்ற மணி, ஆர்.மணிகண்டன் ஆகிய 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி பாரி தீர்ப்பு கூறினார். விக்னேஷ், சக்திவேல், எ.மணிகண்டன் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். #tamilnews