செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2018-01-02 07:30 GMT   |   Update On 2018-01-02 07:30 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. தினசரி கோவிலுக்கு ஆயிரக்காண பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு கடந்த 29-ந்தேதி ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெறும் என்று கூறியிருந்தனர். கடிதத்திற்கு கீழே வி.சி.கே., காஞ்சிபுரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து கோவில் இணை ஆணையர் ஜெகநாதன் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவில் வளாகத்தில் சோதனை செய்தனர். பக்தர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து கோவிலுக்குள் அனுப்புகின்றனர்.

மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#TamilNews
Tags:    

Similar News