மேலப்பாளையத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
நெல்லை:
நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபத்திய மழையினால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக காணப்படுகிறது. நெல்லை மேலப்பாளையம் அம்பை சாலை மழையினால் உருக்குலைந்து அந்த வழியே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
ஒன்றரை கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை கடக்கவே 25 நிமிடம் ஆகிறது. மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் வாகனங்களும் சேதமாகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவதிப்படுகிறார்கள். புழுதி பரப்பதால் நடந்து செல்வோரும், அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களும் அவஸ்தைக் குள்ளாகின்றனர். இதை சரிசெய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மனிதனேய மக்கள் கட்சியினர் இன்று காலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதித்தது. தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.