செய்திகள்

கன்னியாகுமரியில் சூறைக்காற்று: 2-வது நாளாக கடல் சீற்றம்

Published On 2017-12-17 14:18 GMT   |   Update On 2017-12-17 14:18 GMT
கன்னியாகுமரியில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கன்னியாகுமரி:

ஒகி புயல் கடந்த 30-ந்தேதி கன்னியாகுமரி அருகே மையம் கொண்டதால் குமரி மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலின்போது வீசிய சூறாவளி காற்று மற்றும் கடலில் எழுந்த ராட்சத அலைகள் பார்ப்பவர்களை அச்சம்கொள்ளும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் புயலுக்கு பிறகு அடிக்கடி கன்னியாகுமரியில் கடல் சீற்றமும், சுறாவளிக்காற்றும் வீசி வருகிறது. நேற்று காலையில் இருந்தே பலத்த காற்று வீசியதாலும், கடலில் ராட்சத அலைகள் எழுந்ததாலும் கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

இதற்கிடையில் இன்று 2-வது நாளாக கன்னியா குமரியில் சூறைக்காற்றும், கடல் சீற்றமும் காணப்படுகிறது. 10 அடி வரை எழும் ராட்சத அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்து பாறைகள் மீது மோதியது. இதனால் இன்றும் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக இங்கு வரும் சுற்றுலாபயணிகள் முக்கடல் சங்கம கடலில் குளித்து மகிழ்வார்கள்.

இன்று கடல் சீற்றமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர். மேலும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்தும் இன்று நடைபெறவில்லை. காலையிலேயே படகுதுறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் படகில் செல்ல முடியாமல் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News