தமிழக கவர்னர் பன்வாரிலால் 18-ந்தேதி சேலம் வருகை
சேலம்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் 14-ந்தேதி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் துப்புரவு பணியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத் திற்கு கவர்னர் சென்று பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
இதன் தொடர்ச்சியாக கவர்னர் இன்று கடலூர் சென்று உள்ளார். வருகிற 18-ந் தேதி கவர்னர் சேலம் வருகை தர உள்ளார்.
இதற்காக வருகிற 17-ந்தேதி அவர் சென்னை எழும்பூரில் இருந்து ரெயில் மூலம் சேலம் வருகிறார். சேலத்தில் 18-ந்தேதி காலை 10 மணிக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடை பெறும் 41-வது அகில இந்திய சமூக அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த மாநாட்டில் கவர்னருடன் அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் ,இந்திய சமூக அறிவியல் காங்கிரஸ் மாநாட்டுக்குழு தலைவர் டாக்டர்கே.எஸ்.சர்மா, பொது செயலாளர் டாக்டர் என்.பி. சவுபே, பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்க வரும் கவர்னர் சேலம் மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கவர்னர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்த போது தி.மு.க. உள்ளிட்ட பலவேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர் ஆய்வு பணியை நிறுத்தவில்லை.