செய்திகள்

மே தின பூங்கா-டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது

Published On 2017-12-08 06:55 GMT   |   Update On 2017-12-08 06:55 GMT
மே தின பூங்கா-தேனாம்பேட்டை டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

மே தின பூங்கா- தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையில் முதல் வழித்தட பாதை சுரங்கம் தோண்டும் பணி கடந்த அக்டோபர் 18-ந் தேதி முடிந்தது. அதில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேதின பூங்கா-தேனாம்பேட்டை- டி.எம்.எஸ். பாதையில் 4 கி.மீட்டர் சுரங்கம் தோண்டும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. வருகிற திங்கட்கிழமையில் சுரங்கம் தோண்டும் எந்திரம் பணி முடிந்து வெளியே வருகிறது.

இதுவரை 45 கி.மீட்டர் தூரம் முதல் கட்டமாக சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சாதனை மைல் கல்லாக இது அமைந்துள்ளது. 6 ஆண்டுகளாக நடைபெற்ற பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

மே தின பூங்கா-டி.எம்.எஸ். வழித்தட சுரங்க பாதையில் 2018-ல் மெட்ரோ ரெயில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மே தின பூங்கா-டி.எம்.எஸ். இடையே 2-வது லைன் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது. வருகிற திங்கட்கிழமை சுரங்க தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக சாதனை நிகழ்த்தி வெளியே வருகிறது. இந்த வழித்தட பாதையில் 5 சுரங்க ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த வழித்தட பாதையில் 2018ல் மெட்ரோ ஓடும். இதுவரை 45 கி.மீட்டர் தூரம் முதல் கட்டமாக சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிறு வனத்தின் புதிய சாதனையாக இது அமைந்துள்ளது. டி.எம்.எஸ்.-சைதாப்பேட்டை 3.6 கி.மீட்டர் சுரங்க பாதையில் 2018 மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News