செய்திகள்

விழுப்புரம் லாட்ஜில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-12-05 08:19 GMT   |   Update On 2017-12-05 08:19 GMT
விழுப்புரம் லாட்ஜில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:

திருச்சி இ.டி.ஏ. தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). இவர் திருச்சி பொன்மலையில் கந்துவட்டி தொழில் செய்பவரிடம் பணம் வசூல் செய்பவராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் வந்தார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இந்த நிலையில் நேற்று காலை முதல் அருண்குமாரின் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் லாட்ஜ் ஊழியர் அறைக்கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார். அப்போது மின்விசிறியில் சேலையால் அருண்குமார் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் உடனே விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காமராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பிணமாக தொங்கிய அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கந்து வட்டி தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அருண்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தனிப்படை போலீசார் திருச்சிக்கு விரைந்துள்ளனர். லாட்ஜில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News