செய்திகள்

முதல்வர் பழனிசாமி முகாமில் மேலும் இரண்டு டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள்

Published On 2017-11-28 13:30 GMT   |   Update On 2017-11-28 13:30 GMT
டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த திண்டுக்கல் எம்.பி உதயகுமார் மற்றும் வேலூர் எம்.பி செங்குட்டுவன் ஆகிய இருவரும் முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்துள்ளனர்.
சென்னை:

இரட்டை இலை சின்னம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் அணி மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப, முதல்வர் பழனிசாமி நேற்று கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் திடீர் திருப்பமாக டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.பி.க்களான நவநீத கிருஷ்னன், விஜிலா சத்தியானந்த் மற்றும் கோகுல கிருஷ்னன் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில் ஐக்கியமாகியுள்ளதாக அவர்கள் பேட்டியளித்தனர்.

இந்நிலையில், டி.டி.வி தினகரன் அணியில் இருந்த திண்டுக்கல் எம்.பி உதயகுமார் மற்றும் வேலூர் எம்.பி செங்குட்டுவன் ஆகிய இருவரும் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளனர். இதனால், முதல்வர் அணிக்கு சென்றுள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சின்னம் முதல்வர் அணிக்கு சென்றுள்ளதால், கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் அணி மாறியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்கு கிடைத்திருந்த நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News