வாணாபுரம் அருகே பள்ளி மாணவன் அடித்து கொலை?
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை தாலுகா பவித்திரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் மனோசந்திரன் (வயது 17). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சின்னப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள முள்புதரில் மனோசந்திரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து வெறையூர் போலீசாருககு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், வெறையூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், வருவாய் ஆய்வாளர் சாரதா, கிராம நிர்வாக அலுவலர் மாதவன் ஆகியோர் சம்பவ இடதிற்கு சென்று, உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த மாணவர் பள்ளி சீருடை அணிந்துள்ளார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. பள்ளிக்கு சென்ற அவரை கடத்தி சென்று அடித்து கொலை செய்து வீசியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மாணவர் பெற்றோர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.