செய்திகள்

திருப்பூரில் பெண் கொலை: கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

Published On 2017-11-22 17:12 GMT   |   Update On 2017-11-22 17:12 GMT
திருப்பூர் பெண் கொலையில் கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி தங்கம்மாள் (45). இவர்களுக்கு கீர்த்தனா, நந்தினி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருப்பூரில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கிருஷ்ணனுக்கும், தங்கம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தங்கம்மாள் கடந்த 4 வருடத்திற்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த பொன்னையா என்கிற பாண்டியை 2-வது திருமணம் செய்து கொண்டார். தூத்துக்குடியில் அவர்கள் வசித்து வந்தனர். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் தங்கம்மாள் 2- வது கணவரை பிரிந்து திருப்பூர் முத்தையன் நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.பொன்னையாவும் திருப்பூர் வந்து கல்லாங்காட்டில் தங்கி இருந்தார்.நேற்று காலை தங்கம்மாள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ராமையா லே அவுட் பகுதியில் சென்ற போது அங்கு வந்த பொன்னையா தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

தங்கம்மாள் வர மறுக்கவே ஆத்திரம் அடைந்த பொன்னையா தான் கொண்டு வந்த அரிவாளால் தங்கம்மாளை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கம்மாள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

கொலையாளி பொன்னையாவை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் கயல்விழி மேற்பார்வையில் இந்த தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் உதவி கமி‌ஷனர் தங்கவேல், இன்ஸ் பெக்டர்கள் நெல்சன், தென்னரசு, தனசேகரன் மற்றும் போலீசார் இடம் பெற்று உள்ளனர். அவர்களில் ஒரு தனிப்படை தூத்துக்குடிக்கும், மற்றொரு தனிப்படை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிக்கும் சென்று உள்ளது.

கொலையாளி பொன்னையா திருப்பூரில் வசித்து வந்ததால் அவர் இங்கு பதுங்கி உள்ளாரா? என ஒரு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். கொலையாளி விரைவில் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News