செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 ராமேசுவரம் மீனவர்களுக்கு 30-ந்தேதி வரை சிறை

Published On 2017-11-19 13:03 GMT   |   Update On 2017-11-19 13:03 GMT
கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட 8 ராமேசுவரம் மீனவர்களுக்கு 30-ந்தேதி வரை சிறைதண்டனை விதித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தியும், தாக்கியும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டியடித்து வருகிறது. நேற்று ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 441 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். அப்போது தங்கச்சி மடத்தை சேர்ந்த 4 மீனவர்கைளை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.  இதேபோல் மற்றொரு பகுதியில் மீன்பிடித்த மண்டபம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை விசைப் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மன்னார், காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் ஜாப்னா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News