செய்திகள்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்யலாம்: உயர்நீதிமன்றம்

Published On 2017-11-15 11:11 GMT   |   Update On 2017-11-15 11:11 GMT
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்யலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அமைதியான சூழல் அமைய உத்தரவிடக்கோரி மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ‘பல்கலைக்கழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த வன்முறையில் பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இப்போராட்டம் பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழலை பாதிப்பதுடன் மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட  நடவடிக்கை குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். அத்துடன், டிஜிபி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். ஆனால், டிஜபி ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு வாரண்டு பிறப்பிக்கப்படும் என்று  நீதிபதி எச்சரித்தார்.


இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவரிடம், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி,
பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்யலாம் என்றும் தெரிவித்தார். உரிய அடையாள அட்டை இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.

மேலும், இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 24-ம் தேதி ஒத்திவைத்தார். அத்துடன், டிஜிபி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News