செய்திகள்

மரக்காணத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2017-11-14 06:13 GMT   |   Update On 2017-11-14 06:13 GMT
மரக்காணத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.8 லட்சம் மதிப்பிலான 35 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம்:

சென்னை நுங்கம் பாக்கத்தை சேர்ந்தவர் விசுவநாதன்(வயது 46). அங்குள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், திண்டிவனம் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு நகைகளை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம்.

நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து மரக்காணம் செல்லும் பஸ்சில் விசுவநாதன் ஏறினார். அப்போது ஒரு பையில் 35 பவுன் நகைகள் வைத்திருந்தார். இரவு 12 மணியளவில் மரக்காணம் பஸ்நிறுத்ததில் அவர் வந்து இறங்கினார்.

பின்னர் திண்டிவனம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் செல்லும் பஸ் வந்தது. அதில் அவர் ஏறினார். அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.

பிரம்மதேசம் அருகே பஸ் சென்றபோது விசுவநாதன் கையில் வைத்திருந்த பையை பார்த்தார். அதில் இருந்த நகைகளை காணவில்லை. யாரோ கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் பையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.8லட்சம் ஆகும்.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் விசுவநாதன் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மரக்காணம் பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி.கேமராவை பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

விசுவநாதன் பஸ்சில் ஏறும்போது 2 பெண்கள் அவருடன் ஏறியுள்ளனர். அவர்கள் அந்த நகைகளை கொள்ளையடித்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News