செய்திகள்

தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Published On 2017-11-13 03:02 GMT   |   Update On 2017-11-13 03:02 GMT
தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. கடந்த செவ்வாய்க்கிழமை மழை ஓய்ந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று நேற்று முன்தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

சென்னை நகரில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இரவில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில், வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:-



தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவான குறைந்தழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அப்படியே உள்ளது. அது 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மழை நிலப்பகுதியில் பெய்யாமல் கடலில் பெய்துவிட்டது.

திங்கட்கிழமை (இன்று) பகல் 12 மணிவரை வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். பகல் 12 மணிக்கு மேல் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில சமயங்களில் லேசான மழை பெய்யும்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை பெய்ய வேண்டிய மழை அளவு 268 மி.மீ. ஆனால் 245 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. இது 9 சதவீதம் குறைவு ஆகும். ஆனால் சென்னை மாவட்டத்தில் மழை 55 சதவீதம் கூடுதலாக பெய்து இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 78 சதவீதம் கூடுதலாக மழை பெய்து உள்ளது.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.
Tags:    

Similar News