செய்திகள்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை

Published On 2017-11-12 15:49 GMT   |   Update On 2017-11-12 15:49 GMT
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை:

சென்னையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வழக்கத்தைவிட அதிகளவில், அதாவது 68 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பலத்த மழை காரணமாக வெள்ளக் காடான சென்னை இப்போதுதான் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.

ஆனால், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்யும் மழை 5 நாட்களுக்கு தொடரும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் 14-ம் தேதி முதல் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தெரியாத அளவிற்கு குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

ஆனால் மாலையில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தரமணி, பெருங்குடி, தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News