செய்திகள்

தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி - கனமழை எச்சரிக்கை

Published On 2017-10-28 08:30 GMT   |   Update On 2017-10-28 08:30 GMT
தமிழக கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகத்திலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு நல்ல மழை கிடைக்கும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் தமிழக கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்திலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சென்னையில் இன்று 2-வது நாளாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழை கொட்டியது. சென்னை புறநகர் பகுதியிலும் நல்ல மழை பெய்தது.



இதுபோல் கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் உள்பட தென் தமிழகத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அருப்புக்கோட்டை, நத்தம், காங்கேயம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சேரன்மா தேவி, பெரியார், விருதுநகர் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழையும், மேலூர், கடலூர், உடுமலைபேட்டை, பெரிய குமார், பழனி, கோபி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும் பேச்சிப்பாறை, சாத்தூர், திருமங்கலம், காரைக்கால், பாளையங்கோட்டை, வேதாரண்யம், சங்கரன்கோவில், கோத்தகிரி, அரண்மனை புதூர், பெருந்துறை, வானூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

செம்பரம்பாக்கத்தில் 2 செ.மீ., திருவள்ளூர், பூண்டியில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News