எட்டயபுரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தற்கொலை
எட்டயபுரம்:
எட்டயபுரம் நடுவிற்பட்டி அய்யம் பெருமாள் முதலியார் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான இவர் எட்டயபுரம் நடுவிற்பட்டி செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் கைத்தறி தையல் தொழிலாசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் நேற்று காலை தனது மாடி வீட்டின் மேல்புறம் உள்ள அறைக்கு சென்ற தர்மராஜ் பின்னர் அவர் வெளியே வரவில்லை. நீண்ட நேரமாக கீழே இறங்கி வராமல் இருந்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த அவரது மனைவி ஜோதி மாடிப்பகுதிக்கு சென்று பார்த்த போது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மராஜிற்கு மதுமிதா(18) என்ற மகளும், பிரசாந்த்(15) என்ற ஒரு மகனும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.