செய்திகள்

முத்தியால்பேட்டையில் பெண்ணிடம் பணத்தை பறித்து சென்ற 2 சிறுவர்கள் சிக்கினர்

Published On 2017-10-21 14:38 GMT   |   Update On 2017-10-21 14:38 GMT
முத்தியால் பேட்டையில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் பணத்தை பறித்து சென்ற 2 சிறுவர்கள் சிக்கினர்.

புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டை செந்தாமரை நகரை சேர்ந்தவர் அப்துல் முனாப். இவர், அந்த பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நசீமா பேகம் (47).

இவர் தீபாவளி பண்டிகைக்கு கணவருக்கு உதவியாக கோழி இறைச்சி வியாபாரம் செய்ய வீட்டில் இருந்து கோழி இறைச்சி கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது 17 வயதே ஆன 2 சிறுவர்கள் திடீரென நசீமா பேகம் வைத்திருந்த பர்சை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த பர்சில் நசீமா பேகம் ரூ.50 ஆயிரம் வைத்திருந்தார்.

இது குறித்து நசீமா பேகம் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நசீமா பேகத்திடம் பணத்தை பறித்து சென்றது திலாஸ் பேட்டை மற்றும் முத்தியால் பேட்டையை சேர்ந்த 17 வயதுள்ள 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

Similar News