செய்திகள்

தண்டராம்பட்டு அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை

Published On 2017-10-10 11:41 GMT   |   Update On 2017-10-10 11:41 GMT
தண்டராம்பட்டு அருகே இறுதி ஊர்வலத்திற்கு ஆசிரியர்கள் வரக்கூடாது என கடிதம் எழுதி வைத்து பிளஸ்-1 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி லிங்கம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி லஷ்மி. இவர்களது மகன் கோகுல் (வயது 16). தண்டராம்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவன் கோகுலை, வகுப்பு ஆசிரியர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவன் மன முடைந்து காணப்பட்டார். பெற்றோரிடம், இதுப்பற்றி கூறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை பெற்றோர் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் உள்ள அறையில் மாணவன் கோகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விடிந்ததும், மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டனர். மாணவன் சட்டை பாக்கெட்டில் ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘என் இறுதி ஊர்வலத்திற்கு நண்பர்கள் அனைவரும் வர வேண்டும். ஆசிரியர்கள் யாரும் வரக்கூடாது‘‘ என்று எழுதியிருந்தார்.

இதையடுத்து, மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், ஆசிரியர்களுக்கு எதிராக மாணவன் எழுதியிருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News