செய்திகள்

நடராஜனுக்காக ஆடும் தசை ஜெயலலிதாவுக்காக ஆடவில்லையே: தினகரன் மீது ஜெயக்குமார் பாய்ச்சல்

Published On 2017-10-09 09:34 GMT   |   Update On 2017-10-09 09:34 GMT
இன்று நடராஜனுக்காக ஆடும் தசை அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஆடவில்லையே என்று தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை:

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை காப்பதுதான் தமிழக அரசின் தலையாய கடமை. அதற்கான தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இன்று கூட இலங்கை மற்றும் இந்திய கூட்டுக்குழு பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்து வருகிறது.

இந்த அரசை சசிகலா அமைத்தார் என்ற கருத்தை ஏற்க முடியாது. இது அம்மாவின் அரசு. அம்மா அமைத்த அரசு.

எந்த நிலையிலும் இந்த அரசு கலைந்துவிடக்கூடாது. எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக இருக்கிறோம்.

செல்லூர் ராஜு மனசாட்சியுடன் பேசி இருப்பதாக தினகரன் கூறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மனசாட்சி பற்றி யார் பேசுவது? சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். இன்று நடராஜனுக்காக தசை ஆடுகிறது. ஆனால் அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபோது இந்த தசை ஆடியிருக்க வேண்டும்.

அம்மாவுக்கு அந்த குடும்பம் இழைத்த துரோகத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று வாய் கிழிய பேசும் தினகரன் அம்மா உடல்நலம் பெற என்றாவது பிரார்த்தனை செய்து இருப்பாரா?

சசிகலா அவரது வீட்டுக்காரரை பார்க்க வருகிறார். அதற்கு மேளதாளம் என்ன? வரவேற்பு என்ன? எல்லாவற்றையும் மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள்.

அமைச்சர் செல்லூர் ராஜுதான் சிலிப்பர் செல் இல்லை என்று விளக்கி இருக்கிறார். நிச்சயமாக அவர் சிலிப்பர் செல் ஆக இருக்க மாட்டார். அம்மா அரசு தொடர ஒத்துழைப்பு கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News